பேரிடியாய் ஒரு செய்தி 
சற்றேனும் எதிர்பார்த்திராத 
சங்...கடமா....ன..... ஒரு தகவல் 
இன்னாலில்லாஹ் ......!! 

என் மூத்த ஆசான் .... 
என் கலைக்கு வித்திட்ட வித்தகர் ... 
நான் எழுதும் வரிகளுக்கு 
அத்திவாரமவர் ...
என்னுடன் சொற்சமர் புரியும் 
தமிழ்வீரரவர் ...
நான் வரையும் கவிதைகளுக்கு 
வர்ணனை சொல்லும் 
வசந்தமானவர் ... 
என் வாழ்வையே திசை திருப்பிய 
திருப்புமுனையவர் ... 
முன்னாட்களில் என் கவிதைகளை பட்டை தீட்டிய 
மூத்த ஆசானவர் ... 
இந்நாட்களிலும் 
என் கவிதைகளுக்காய் 
காத்திருக்கும் ரசிகரவர் ... 
மன்னார் ஜாபிர் சேர் அவர்... 

மூத்த ஆசானே 
நீர் ஞானப்பழம் தான்... 
இல்லையில்லை .. 
அதுவும் ஈடாகாது 
உம் அறிவுப்புலமைக்கு....

ஆசானை அறிமுகப் படுத்தி கல்வியை 
கனி சாப்பிடுவது போல 
இனிப்பாக்கித்தந்த 
பெருமை 
A to Z கல்வி நிறுவனத்தையே சாரும்.. 

ஒன்பதாம் தரமதில்.... 
படிக்கும் காலமதில்... 
தந்தை இல்லாத அநாதை நான் என்று 
என்னை அறிமுகம் செய்ய,
இல்லை இல்லை... 
ஆற்றலுள்ளவள் நீ என்று 
என்னை ஆற்றுப்படுத்தினீரே.... 
உங்களைப் போல்... 
உங்களைப் போல்... 
இனி யார் என்னை தட்டிக் கொடுப்பார்...!? 
உம்மிடம் கற்ற அத்தனை பாடங்களும் 
இன்றும் எம் நெஞ்சில்... பசுமரத்தாணியாய்.... 
எம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போதெல்லாம் 
எங்கள் ஜாபிர் சேர் சொல்லித்தந்தது 
என்று பெருமையுடன்...  பசுமையான காலமதை நினைவு கூறுவதுண்டு... 
தமிழ்ப்பாடத்தில்...
இலக்கியத்தில்... 
இலக்கணத்தில்... 
என்று 
சந்தேகம் வரும்.., 
அழைப்பெடுத்து விடை காண்பேன்.. 
இனி... யாருக்கு அழைப்பெடுப்பேன் என் ஆசானே...! 

"ஒன்பதாம் தரமது 
ஒவ்வொன்றாய் 
கவிதைகள் என்னில் 
எழுத்தாணியாய்… 
கோர்வையாய் மனதில் 
உதித்திடவே 
கண்டிட்டார் தமிழ்ப்பாட ஆசானே… 
எழுத்துக்கள் தொடர்ந்திட 
அவர் வாழ்த்தும் 
எழுதிய கவியை திருத்திடவும் 
உறுதுணை உற்சாகம் 
அவர் ஊட்ட 
வளர்ந்திட்டது என்னுள்ளே 
கவி வரிகள் 

பார் போற்றும் கவிஞனாய் 
நானோ இல்லை 
பாங்காக என் கவிகள் அரங்கேற வழிபிறக்க 
செய்து விட்ட என் ஆசானே… 
உம்மை வாழ்த்த வார்த்தை ஏது..?! "

மூத்த ஆசானே... என்ற நாமம் கொண்டு 
உமக்காய் எழுதிய கவிகள் பல... 

ஒக்டோபர் பதினாறாம் திகதியது 
மீலாத் கவியரங்க மேடையது 
மேடையேறுமுன்னமே 
வாழ்த்துக்கூறி 
வழியனுப்பி வைத்த ஆசானே... 
உங்களுக்கு பிரியாவிடை கொடுப்பதற்காய் 
நிற்கிறோமே... 

என் கன்னி முயற்சியாய் 
கவிதை நூல் 
கரு உருப்பெற்று வரும் தருவாயில் 
பதிப்பகத்தில் காத்திருக்க... 
பக்கம் பக்கமாய்
நீர் எழுதிய 
அணிந்துரையின் 
மையீரம் காயுமுன்பே 
அழகான இடம் நோக்கி 
புறப்பட்டு விட்டீரே... 
நீங்கள் அனுப்பிய 
கையெழுத்துப் பிரதிகளை 
காணும்போதெல்லாம் 
கண்கள் தானாய் நீரைச் சொரிகின்றன... 
இந்த தள்ளாடும் வயதிலும் 
எழுத்துக்களின்
நேர்த்தியும் அழகும் 
சொல்லில் வர்ணிக்க முடியாதவை
உங்கள் குரலோ 
என் காதுகளில் 
எதிரொலி.... 
நீங்கள் எனக்காய் கூறிய ஆசிகள் 
நிஜம் பெறும் போது 
அதனைக் கண்டு களிக்க 
நீங்கள் என் பக்கம் இருக்க மாட்டீர்களே... 
பயணப்பட்டு விட்டீர்கள்... 
ஆசானே.... 

வல்லவன் அல்லாஹ் .. 
நிச்சயம் உங்களுக்கான இடத்தை அழகாக்கி வைத்திருப்பான்.. சுவர்க்கப்பூஞ்சோலையை பரிசளிப்பான்.. 
மாணாக்கர் மனதில் இடம் பிடித்த 
கவிமணியே.... 
நீங்கள் கற்றுக்கொடுத்த அத்துணை மாணாக்கரின் துஆக்களிலும்  நீங்கள் நிச்சயம் இருப்பீர்கள்.. 
சிறந்த ஆன்மாவாக 
சிறந்த இடத்திற்கு 
சென்றுள்ளீர்கள்... 
அல்லாஹும்மஃ பிர்லஹூ 
வர்ஹம்ஹூ

உங்கள் அன்புக்கும் அபிமானத்துக்குமுரிய 
உங்கள் நெஞ்சில் நிழலாடிய 
பண்பும் பரிவுமிக்க 
மாணவி.... 

பயாஸா பாஸில் 
கஹட்டோவிட்ட 

Fayasa fasil - writer

Comments

Popular posts from this blog

என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் நூல் வெளியீட்டு விழாவும் நூல் விமர்சனமும் - லுதுபியா லுக்மான்

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

சிறு களஞ்சியம் தான்